Tuesday, November 16, 2010

தமிழ் வாழ்த்து காரைக்கிழார் ,கோலாலம்பூர்

தாயே தமிழே என்மொழியே
தரணியில் மூத்த செம்மொழியே
சாதனை கண்ட சரித்திரமே 
சங்கம் வளர்த்த பெருந்திறமே               தாயே           

திரைகடல் ஓடிய காலத்திலும்
தினம் வேர்வை சிந்திய நேரத்திலும்
அம்மா என் ஆவியில் நிறைந்தவளே  
தலைமுறை தோறும் கலந்தவளே            தாயே

தோட்டத் துறைகளில்  வாழ்ந்தாலும்
துணையாகக் கோவிலில் இருந்தவளே
வாட்டங்கள் நீங்கிட ஒருநாளில்
வளமான நல்வாழ்வு தந்தவளே             தாயே

மதங்கள் பலவாயின் இருந்தாலும்
மனங்களில் தமிழாய் இணைந்தவளே  
நிறங்கள் கடந்து சோதரராய்
நீ தந்த அருளாலே உயர்வடைந்தோம்      தாயே

அரிச்சுவடி எனநீ  தொடங்குகிறாய்
அறிவாக நாவிலே அடங்குகிறாய்
பல்கலைக் கழகம் உருவாக்கி
பாருக்கே தலைமை நீயானாய்               தாயே


செம்மொழி அணிகலன் பூண்டவளே
சிலம்பும் மேகலையும் கொண்டவளே
அம்மா தமிழே வாழியவே
ஆழிபோல்  வானம்போல் வாழியவே         தாயே

                             

No comments:

Post a Comment